Tuesday, February 21, 2012

ஊடலின்பம்!


அருமை நண்பர்களே,
கவிதை இலக்கிய ஆர்வலர்களே,
காதற்சுவை ததும்பும் கவிதைகளைப் படைப்பதில் அளப்பறிய ஆர்வம் கொண்ட கவிஞர்களே,

வணக்கம்.

முகநூலில் தொடர்ந்து எனது பதிவுகளைப் படித்து வரும் எனது நண்பர்கள் பலரும் அறிந்திருக்கும் உண்மை,  ‘நான் காதல்,சினிமா,காமெடி என்ற வகையிலான கருத்துக்களை எழுதுவதிலோ அவை பற்றிய விமர்சனங்களில் பங்கு பெறுவதிலோ ஆர்வம் காட்டாதவன்; அவற்றைக் கடுமையாக விமர்சிப்பவன்என்பது.

சில நண்பர்களுக்கு இதில் சற்று விசனம்கூட வந்ததுண்டு, இன்னும் சிலர்  ‘ஏன் ஸார்,உங்களுக்கு காதல் என்றாலே பிடிக்காதோ? என்று கூட எனக்கு எழுதியிருக்கிறார்கள்.

நானே கூட
  “காமெடி,சினிமா,காதல் பித்து,
  கவிதை எனும் பெயரில்
  யாம்இன்புற்று எழுதுவ தில்லை;
  என்னை மன் னிப்பீர்!

என்று,இதே முக நூலில் எழுதி இருக்கின்றேன்.ஆம்.நான் இங்கு  ‘காதல் கவிதைகள்என்னும் பெயரில்குப்பை கொட்டுவதைஎதிர்ப்பவன்;விரும்பாதவன்தான்.

ஆனால் உண்மை என்ன தெரியுமா

எனக்கும் காதல் உண்டு;அது இலக்கியம் தழுவிய எண்ணங்களில் மூழ்கி இன்புற்று மகிழ்ந்த காதல்; பண்பினாலும் அறிவார்ந்த அன்பினாலும் அந்தக் காதலுக்கு சமாதி கட்டிய ஷாஜகான் நான்.

அந்தக் காதலுக்கு நான் சமாதி கட்டியதன் மூலம் அதன் நினைவுகள் அமரத் தன்மை பெற்றிருப்பதாய்ப் பெருமை கொண்டு,இதோ, எனது ஊரின் அமராவதி நதியின் நினைவுகளில் மூழ்கி, உங்களுக்குக் காதல் இலக்கியக் கவிதை ஒன்றை யாத்திருக்கின்றேன்.

தலைவன் தலைவி;நாயக-நாயகி ஊடலின் முடிவில் கூடி முயங்கும் காதல் இன்பத்தின் நுகர்ச்சியை வெளிப்படுத்தும் கவிதை இது.

வள்ளுவன் வடித்த காமத்துப்பாலின்ஊடல்உவகை' அதிகாரத்தின்
இறுதிக் குறளின் இலக்கண விளக்கம்போன்ற இந்தக் கவிதையில் இன்புறுங்கள்.நன்றி.
அன்புடன்,
கிருஷ்ணன்பாலா
24.12.2011

---------------------------------------------------------

ஊடுதல் காமத்திற்கின்பம்!
---------------------------------------------------------


                    
                            
















அன்றொரு நாள் மார்கழியின்
       அழகான பவுர்ணமி நாள்;
நின்றிருந் தேன்அமர நதி
        நீள்கரையின் வயலோரம்;
கன்றிளமை வயதோடும்
       காதலியின் நினைவோடும்
மென்றுவரும் நினைவலைகள்
       மேவி வரக் காணுகின்றேன்:

வானமெனும் வீதியதில்
       வட்டமிடும் வெண்ணிலவு;
மோன நிலை நானடைந்து   
       மூழ்கி,அதில் எனை மறந்தேன்;
பூனையென நடந்து வந்து;
       பூ விழியாள் தீண்டிவிட்டு,
ஏனென்று கேட்டதுபோல்
       இடம் பெயர்ந்து நின்றிருந்தாள்!

’’ஆகா,என் ஆருயிரே
      ஆனந்தத் தேனமுதே;
வாகான வளர் கவிதை
      வழங்குகின்ற அட்சயமே!
ஏகாந்த வேளையிதில்
      ஏன் விலகி நிற்கின்றாய்?
நோகாமல் நோக வைக்க
      நோக்காமல் நிற் குதியோ?”

என்றவளை ஏறெடுத் தேன்:
      இரக்கமின்றி அவளு ரைத்தாள்:
இன்றுநான் வரும் போது 
      என் நினப்பு இல்லாமல் 
நன்றென்று வெண்ணிலவில்
      நாட்டம்தான் கொண்டிருந்தீர்?
பின்னெதற்கு நா னிங்கு?
      பேசாமல் போ கின்றேன்!”

அய்யய் யோ,கண்மணியே,
       அநியா யம்உன் கோபம்
பொய் யன்று என் காதல்;
      புரியாதோ என் மனது?
மெய்யாகச் சொல் கின்றேன்
      மேகத்தில் உன் முகந்தான்
கொய்து வைத்த நிலவாக
      கொள்ளை யிடக் கண்டேண்டி’”

உன்னழகை எண் ணித்தான்
      உள்ளம் பறி கொடுத் திருந்தேன்;
என்றென் றும்எப் போதும்
      எங்கே யும் உன் நினைவில்
பின்னு கின்ற உவமைகளில்
      பேசுவதில் உருகும் நீ
என்கவி தைப் பாடுபொருள்;
       இலக்கணமும் நீதானே!

முந்நாளில் நாம் இருவர்
      மோகத்தில் திளைத்திருந்த
அந்நாளை மறந்தனையோ?
      அப்போதும் இந் நிலவே
ஆகாயச் சாட்சியன்றோ?
       இப்போது மட்டும் அதை
எதிரியெனக் காண்குவையோ?
       முந்தாமல் முந்தி எனை
மூழ்க வைத்த கூடலில்நீ--

முத்து நகையாடியதும்                                  
       மோகமொழி வேகமதில் 
தத்தை என மாறியதும்
       தஞ்சமெனத் தாவி எனைக்
கொத்தி விளை யாடியதும் 
       கொவ்வை இதழ் ஓரமதில்
வித்தை பல காட்டி யதும் 
    வெண் ணிலவின் சாட்சியடி!

இவ்வாறு எடுத் துரைக்க
     இடைதளர்ந்து எனைநோக்கி;
கவ்வா மல்கவ்வு கின்றாள்;
      காதலன் நான் மெய்யளக்க;
தவ்வா மல்தவ்வு கின்றாள்;
      தையல் அவள் மைய லுற
செவ்வாயில் முத்துரைத் தேன்;
      சேயிழை யோசொத் திழந்தாள்!

          -கிருஷ்ணன்பாலா-
                  24.12.2011
--------------------------------------------------------------------------------------------
ஊடுதல் காமத்திற் கின்பம்; அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்
 (திருக்குறள்: காமத்துப் பால்:அதிகாரம்:ஊடல் உவகை - குறள்:1330)
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

No comments:

Post a Comment