Wednesday, October 24, 2012

அறிவுச் செல்வம் அளித்த அன்னை




என்னைப் படைத் துலகை எந்நாளும் காத்துவரும்
அன்னைகலை வாணியவள்;அடிமலரைப் போற்றுகின்றேன்!

முன்னை வினை யாவும் முற்றாக அழித்தவளின்
பின்னை யான்தொடர்ந்து பெருமைகளைப் பூட்டுகின்றேன்!

‘ஏதிலான்போல்’ என்னை இருக்க வைத்திவ் வுலகில்
‘ஏது இலான்இவன்?’ என்று இராஜனையும் அஞ்ச வைத்தாள்!

கற்றோர் சபை நிறுத்தி கல்லாத என்உளத்தில்
மற்றோர் மயங்குகின்ற மாத்தமிழை மிஞ்ச வைத்தாள்!

பொற்றா மரைக்குளத்தில் புலவரெலாம் ஏங்குகின்ற
நற்றாள் சுவடி எலாம் நாடிவந்து எனக் கீன்றாள்!

அறிவென்னும் ஆயுதத்தை அடையாளம் காட்டி,அதில்
செறிவோடு சிந்திக்கும் சிந்தனைக்குள் எனை ஆண்டாள்!

‘பொன்னும் பொருளும்தினம் பொய்நின்ற வாழ்வோடு
மின்னும் சுகங்கள்’ என மேதைமையில் சிரிக்கின்றாள்!

‘திருமகளின் திருவடியும் தீரத்தின் மலைமகளும்
பெருமைக்கு உரிய தென’ப் பேசுவதை ரசிக்கின்றாள்!

மதியிழந்து போனபின்னர் மாளாத செல்வத்தின்
கதி என்ன ஆகும்? எனக் கண் சிமிட்டிக் கேட்கின்றாள்?

வீரமெனும் ஆற்றல்கள் விளைவிக்கும் பெருமை எலாம்
கூர்மைமிகும் புத்திமுன் குனிய வைத்துப் பார்க்கின்றாள்!

சிந்திக்கும் அறிவோடும் சீரான தெளிவோடும்
வந்திக்கும் விதியளித்து வாழ்வளித்தாள் என் அன்னை!

உண்மை,உயர் நோக்கம் ஒரு நாளும் தளராத
திண்மை மிகும் நெஞ்சம்தெளிவான தமிழ்த் தேடல்!

நேர்கொண்ட எழுத்துக்கள் நிஜமான கருத் துக்கள்;
‘யார் என்னை எதிர்த்தாலும் எதிர் நிற்க முடியாது!
பார்” என்று பறை சாற்றும் பைந்தமிழின் வல்லோனாய்
வார்த்தென்னை வைத்தாளை  வணங்கு கின்றேன்;இந்நாளில்!

இவண்-
கிருஷ்ணன்பாலா
22.10.2012

Saturday, June 30, 2012

காமமா? ஞானமா?



---------------------------------------------------------------------------
காதல்வசப்படும் மனதில் ஞானத்தின் குழப்பமும்
ஞானத்தைத் தேடும் மனதில் காமத்தின் குறுக்கீடும்
கவிஞனைப் படுத்தியபாடு இருக்கிறதே,அது ஒரு
குழப்பமான ஆனந்த அவஸ்தைதான்.

அந்த அவஸ்தையின் வசத்திலிருந்து மீள்வதற்கும் 
ஆள்வதற்கும் அது சற்குருநாதனைச் சரண் அடைந்து
பேசும் கவிதை ஓர் ஞானானந்த அனுபவம். இது 1984ல்.

கவிதையின் உயர் கோப்பும் மனச் சான்றின் மாறான
தீர்ப்பும் ஒருசேரப் பாய்ந்து வரும் இந்தப் பண்பாட்டுப் 
படைப்பைச் சுவைப்பதற்கே ஞானம் வேண்டும்.
---------------------------------------------------------------------------

அச்சமோர் புறத்திலும்
ஆசைஓர் தரத்திலும்
அனுதினம் நெஞ்சிலே புரள

அருளெலாம் மேவிடும்
அய்ய,நின் பாதமே
அடிமைஎன் நினைவிலே திரள

இச்சையால் நேரிடும்
இழிநிலை யாவையும்
எண்ணிஎன் உள்மனம் குமைய

இந்த நாள் உணர்ச்சியில்
இருதலைக் கொள்ளியுள்
எறும்பென என்நிலை அமைய

இம்சைகள்   மீளவும்
என்னையே ஆளவும்
இருந்திடும் நிலையினில் அழுதேன்!

என்னைநீ மீட்கவே
இன்பமே காக்கவே
இணையிலா உன்அடி தொழுதேன்!

சம்மதம் கொண்டுஎன்
சஞ்சலம் கொன்றிடும்
சத்திய ஜோதிநீ வருக:

சச்சிதா னந்தமாய்
சகலமும் அறிந்தஎன்
சற்குரு நாதனே அருள்க!

கயல்விழி மாதரை
கடலெனும் ஆசையில்
கவிமனம் தேடுதல் தவறா?

கச்சவிழ் கொங்கையில்
கண்களே வீழ்ந்தபின்
கவலைதா விடுவது சரியா?

இயல்படு மானுடர்
இலக்கணம் காமமாய்
இருப்பதே இல்லற வழக்கா?

ஈருடல் கலப்பது
இறைவனின் நினைப்பெனில்
என்நிலை அதில்விதி விலக்கா?

இன்றுநான் கேட்கிறேன்;
என்னையே பார்க்கிறேன்;
என்னுளே இருப்பது நீயே!

ஏதுநான் செய்கினும்
எப்பிழை ஆயினும்
என்னைநீ காத்திடு தாயே!

சன்னதி உன்னடி
சந்ததம் தேடினேன்;
சத்தியத் தெய்வம்நீ வருக!

சச்சிதா னந்தமாய்
சகலமும் அறிந்த என்
சற்குரு நாதனே அருள்க!

காதலில் ஞானமா?
காதலே ஞானமா?
கலங்கி நான் நிற்கிறேன் இன்று;

கவிஞனாய் இருப்பதால்;
காமமே ரசனையாய்க்
கவிதைகள் படைக்கிறேன் நன்று!

போதைநீ தருவதாய்
புரிகிறேன்;சரிகிறேன்;
புண்ணிய பாவம்யா ரென்று?

புத்தியே நீஎன
பூண்டஎன் நெஞ்சினில்
புண்படச் செய்தல்நன் றன்று!

யாவையும் நீஎன
ஏற்றவன் செயலினால்
                                என்னகோ பங்கள்நீ கொள்வாய்?

என்னைநீ ஏற்றது
                உண்மையே தானெனில்
                                என்பிழை யாவுமே கொல்வாய்!

சாவையும் வென்றஎன்
                சத்தியக் கவிதையில்
                                சார்ந்திடும் கருவென வருக!

சச்சிதா னந்தமாய்
                சகலமும் அறிந்தஎன்
                                சற்குரு நாதனே அருள்க!

-----------------------கிருஷ்ணன்பாலா-----------------------------

-------------------------------KB/11.5.1984---------------------------------

Wednesday, June 20, 2012

‘நான்’ இனி,நீங்கள்!


நான்எனும் அகந்தை கொண்டு
நான்சொலும் செய்தி எல்லாம்
தேன் பொழித் தமிழின் வீரம்
தெளிவுறக் காட்டு தற்கே!


ஆணவம்’ என்று இதனை
அளப்பவர் யாரும் எழுத்தின்
மாணவர் என்றே சொல்வேன்
மற்றவர் எனது தோழர்!

யாரெது சொன்ன போதும்
எதிர்ப்பிலும் நிமிர்ந்து நின்று
நேர்பட உரைத்தல்;உண்மை
நிலைத்திடச் செய்யத் தானே?

நாட்டிடைத் தீயோர் தலைமை
நாசத்தைச் செய்யும் போது
கேட்டிட யாரும் இல்லாக்
கேவலம் நிலைக்க லாமோ?

ஆட்சியைப் பிடிப் பதற்கே
அரசியல் செய்வோர் தமது
சூழ்ச்சியை எதிர்க்கும் சக்தி
சொல்எனும் எழுத்துக் குண்டு!

தமிழர்தம் வாழ்வும் தூய
தரம்மிகும் பண்பும் இன்று
நமைமிக வருந்த வைக்க
நலங்கெட எழுத லாமோ?

நாட்டிலே லஞ்சம்;மக்கள்
நம்பிக்கைத் துரோ கங்கள்
வாட்டிட வளைந்து நின்று
வரைவது எழுத்தா,என்ன?

பேய்களே ஆட்சி செய்தால்
பிணந் தின்னும் சாத்திரங்கள்;
நாய்களே வாழும் என்றால்
நரகல்தான் நமது வாழ்வு!

கொஞ்சமும் இரக்க மின்றி
கொடுங்கோ லாட்சி இங்கு
வஞ்சகம் புரியும் போது
வாய் பொத்தி நிற்கலாமோ?

ஓய்விலாக் கவலை;நாட்டின்
உறக்கத்தைக் கெடுக்கும் போது;
ஓய்வாகப் படுத்துக் கொண்டு
உறங்குவோன் தமிழன் அல்ல!

சத்தியம் நேர்மை வீரம்
சாற்றிடும் பண்பு யாவும்
செத்ததேன்? என்று இங்கு
சிந்தித்தால் தூக்க மில்லை!

திருடர்கள் கூட்டம் இங்கு
தெருத் தெருவாக நின்று
பெருமைகள் பேசு கின்றார்;
பிறகு நாம் என்ன செய்ய?

சாட்டையை எடுத்து இங்கு
சாடியே கயவர் கூட்டம்
ஓட்டவே செய்யும் எழுத்தின்
உறுதியைக் காட்ட வேண்டும்!

எழுத்திலே வீரம் கெட்டால்
எறும்புக்கும் அஞ்ச வேண்டும்;
கருத்திலே உண்மை நின்றால்
கயவரும் அஞ்ச வேண்டும்;

எழுதுவோர் எல்லாம் இந்த
இலக்கணம் அறிந்து, நமது
பழுதிலா வாழ்வு காக்கப்
படைத்தலே அறிவு என்பேன்!
 
தேங்கிடும் தேசப் பற்றில்
தெளிவுடன் பார்வை கொண்டு
ஓங்கிடும் உறுதி யோடு
உரைப்பதென் நோக்கம்;அறிக!

மிடுக்குடன் மிளிரும் எழுத்தில்
மிதந்திடும் செறுக்கை நீங்கள்
வெடுக்கெனப் புரிவீ ராயின்;
விளம்புவேன்;’நான்;இனி நீங்கள்!

இவண்-
கிருஷ்ணன்பாலா
19.6.2012

Sunday, March 25, 2012

அடடா,அந்த நிலை!.....








சிந்தனலயத்தில் சிக்கிய நிலையில்
சிலிர்த் தெழுகின்றது என்மனது:
எந்தநிலையினில்இருந்தது என்பதை
எண்ணிப் ர்த்ததைச்சொல்கின்றேன்:

புகைப்படம் போல முகப்படம் ஆகிப்
புதிதாய்ப் பதிக்கும் கவிதை;நல்ல 
தொகுப்பெனத் தோன்றும் படித்துப்பாரும்;
தூண்டும் உங்களைத்தாண்டும்!

எழுத நினைத்தேன்;எழுதுகின்றேன்:
எழுதும் நிலையைத் தழுவுகின்றேன்;
தழுவும் நிலையில் நானிருக்கும்;ஒரு
தனிநிலை உணர்ந்தே எழுதுகின்றேன்!

எழுதுதல் எனக்குமிக இயல்பு:
எதையும் எழுதுதல் அதில்எளிது!
பழுதில்லாமல் வார்த்தைகளைப்
படைக்கும் ஆற்றல் தினம்புதிது!

பேனா,திறந்தால் பெருங்கடலின்
பேரலை போல்எழும் சிந்தனைகள்;
ஆனால் அவற்றை ஒரு நொடியில்
அடக்கிடத் துடிக்கும் கற்பனைகள்...

கண்ணை மூடிக் கண் திறந்தால்
கவிதைச் சந்தம் பல நூறு:
விண்ணில் இருந்து விழுகின்றன;
விரைந்து என்னுள் பலவாறு!

எதுகை,மோனை என்பதெல்லாம்
என்முன் தவமாய்த் தவமிருக்க
எதைநான் எடுத்துக் கையாள?
எனக்குள் பெரிய போராட்டம்!

விதையில் லாமல் முளைக் கின்றது;
வித்தில் லாமல் விளை கின்றது;
வதையில் லாமல் வதைக் கின்றது;
வரவேற் பின்றி நுழை கின்றது!'

சாதா ரணமாய்க் கடிதம்'எனச்
சற்றே எழுத நினைத் தாலும்
தோதாய் எதுகை,மோனை களைத்
துரத்தித் துரத்தித் தரு கின்றது!

உரைநடைவேகம் எங்கெங் கோ
உயரப் பறந்து கவி வானில்
வரைமுறை இன்றி உவமைகளை
வாரிக் கொண்டு பொழி கின்றது!

இயைபுத் தொடருள் என் கையோ
எனைக் கேட்காமல் நுழைகின்றது;
சுயமரி யாதை என்ப தெல்லாம்
சூக்கும அறிவாய் விரி கின்றது!

எழுத முனைந்ததும் இவ்வுலகம்
ஏனோ என்முன் மறைகின்றது;
முழுமனம் எங்கோ செல்கின்றது:
மூடருக் கெங்கிது புரிகின்றது?

எழுதும்போ தொரு ராஜ சபை
என்னுள் கூடி,என் எழுத்தைத்
தொழுது போற்றி வாழ்த்துவதை
தூர நின்றே ரசிக் கின்றேன்!

அடட,இதுதான் கவிதை நிலை;
அதற்குள் புகுவோர் அடையும்நிலை;
எடடா,ஏடு;எடுத் தெழுது!
என்னை ஜெயிப்பார் எவர் உண்டு?


இவண்-
கிருஷ்ணன்பாலா
 10.08.2010 / 07:30 pm 

Tuesday, February 21, 2012

ஊடலின்பம்!


அருமை நண்பர்களே,
கவிதை இலக்கிய ஆர்வலர்களே,
காதற்சுவை ததும்பும் கவிதைகளைப் படைப்பதில் அளப்பறிய ஆர்வம் கொண்ட கவிஞர்களே,

வணக்கம்.

முகநூலில் தொடர்ந்து எனது பதிவுகளைப் படித்து வரும் எனது நண்பர்கள் பலரும் அறிந்திருக்கும் உண்மை,  ‘நான் காதல்,சினிமா,காமெடி என்ற வகையிலான கருத்துக்களை எழுதுவதிலோ அவை பற்றிய விமர்சனங்களில் பங்கு பெறுவதிலோ ஆர்வம் காட்டாதவன்; அவற்றைக் கடுமையாக விமர்சிப்பவன்என்பது.

சில நண்பர்களுக்கு இதில் சற்று விசனம்கூட வந்ததுண்டு, இன்னும் சிலர்  ‘ஏன் ஸார்,உங்களுக்கு காதல் என்றாலே பிடிக்காதோ? என்று கூட எனக்கு எழுதியிருக்கிறார்கள்.

நானே கூட
  “காமெடி,சினிமா,காதல் பித்து,
  கவிதை எனும் பெயரில்
  யாம்இன்புற்று எழுதுவ தில்லை;
  என்னை மன் னிப்பீர்!

என்று,இதே முக நூலில் எழுதி இருக்கின்றேன்.ஆம்.நான் இங்கு  ‘காதல் கவிதைகள்என்னும் பெயரில்குப்பை கொட்டுவதைஎதிர்ப்பவன்;விரும்பாதவன்தான்.

ஆனால் உண்மை என்ன தெரியுமா

எனக்கும் காதல் உண்டு;அது இலக்கியம் தழுவிய எண்ணங்களில் மூழ்கி இன்புற்று மகிழ்ந்த காதல்; பண்பினாலும் அறிவார்ந்த அன்பினாலும் அந்தக் காதலுக்கு சமாதி கட்டிய ஷாஜகான் நான்.

அந்தக் காதலுக்கு நான் சமாதி கட்டியதன் மூலம் அதன் நினைவுகள் அமரத் தன்மை பெற்றிருப்பதாய்ப் பெருமை கொண்டு,இதோ, எனது ஊரின் அமராவதி நதியின் நினைவுகளில் மூழ்கி, உங்களுக்குக் காதல் இலக்கியக் கவிதை ஒன்றை யாத்திருக்கின்றேன்.

தலைவன் தலைவி;நாயக-நாயகி ஊடலின் முடிவில் கூடி முயங்கும் காதல் இன்பத்தின் நுகர்ச்சியை வெளிப்படுத்தும் கவிதை இது.

வள்ளுவன் வடித்த காமத்துப்பாலின்ஊடல்உவகை' அதிகாரத்தின்
இறுதிக் குறளின் இலக்கண விளக்கம்போன்ற இந்தக் கவிதையில் இன்புறுங்கள்.நன்றி.
அன்புடன்,
கிருஷ்ணன்பாலா
24.12.2011

---------------------------------------------------------

ஊடுதல் காமத்திற்கின்பம்!
---------------------------------------------------------


                    
                            
















அன்றொரு நாள் மார்கழியின்
       அழகான பவுர்ணமி நாள்;
நின்றிருந் தேன்அமர நதி
        நீள்கரையின் வயலோரம்;
கன்றிளமை வயதோடும்
       காதலியின் நினைவோடும்
மென்றுவரும் நினைவலைகள்
       மேவி வரக் காணுகின்றேன்:

வானமெனும் வீதியதில்
       வட்டமிடும் வெண்ணிலவு;
மோன நிலை நானடைந்து   
       மூழ்கி,அதில் எனை மறந்தேன்;
பூனையென நடந்து வந்து;
       பூ விழியாள் தீண்டிவிட்டு,
ஏனென்று கேட்டதுபோல்
       இடம் பெயர்ந்து நின்றிருந்தாள்!

’’ஆகா,என் ஆருயிரே
      ஆனந்தத் தேனமுதே;
வாகான வளர் கவிதை
      வழங்குகின்ற அட்சயமே!
ஏகாந்த வேளையிதில்
      ஏன் விலகி நிற்கின்றாய்?
நோகாமல் நோக வைக்க
      நோக்காமல் நிற் குதியோ?”

என்றவளை ஏறெடுத் தேன்:
      இரக்கமின்றி அவளு ரைத்தாள்:
இன்றுநான் வரும் போது 
      என் நினப்பு இல்லாமல் 
நன்றென்று வெண்ணிலவில்
      நாட்டம்தான் கொண்டிருந்தீர்?
பின்னெதற்கு நா னிங்கு?
      பேசாமல் போ கின்றேன்!”

அய்யய் யோ,கண்மணியே,
       அநியா யம்உன் கோபம்
பொய் யன்று என் காதல்;
      புரியாதோ என் மனது?
மெய்யாகச் சொல் கின்றேன்
      மேகத்தில் உன் முகந்தான்
கொய்து வைத்த நிலவாக
      கொள்ளை யிடக் கண்டேண்டி’”

உன்னழகை எண் ணித்தான்
      உள்ளம் பறி கொடுத் திருந்தேன்;
என்றென் றும்எப் போதும்
      எங்கே யும் உன் நினைவில்
பின்னு கின்ற உவமைகளில்
      பேசுவதில் உருகும் நீ
என்கவி தைப் பாடுபொருள்;
       இலக்கணமும் நீதானே!

முந்நாளில் நாம் இருவர்
      மோகத்தில் திளைத்திருந்த
அந்நாளை மறந்தனையோ?
      அப்போதும் இந் நிலவே
ஆகாயச் சாட்சியன்றோ?
       இப்போது மட்டும் அதை
எதிரியெனக் காண்குவையோ?
       முந்தாமல் முந்தி எனை
மூழ்க வைத்த கூடலில்நீ--

முத்து நகையாடியதும்                                  
       மோகமொழி வேகமதில் 
தத்தை என மாறியதும்
       தஞ்சமெனத் தாவி எனைக்
கொத்தி விளை யாடியதும் 
       கொவ்வை இதழ் ஓரமதில்
வித்தை பல காட்டி யதும் 
    வெண் ணிலவின் சாட்சியடி!

இவ்வாறு எடுத் துரைக்க
     இடைதளர்ந்து எனைநோக்கி;
கவ்வா மல்கவ்வு கின்றாள்;
      காதலன் நான் மெய்யளக்க;
தவ்வா மல்தவ்வு கின்றாள்;
      தையல் அவள் மைய லுற
செவ்வாயில் முத்துரைத் தேன்;
      சேயிழை யோசொத் திழந்தாள்!

          -கிருஷ்ணன்பாலா-
                  24.12.2011
--------------------------------------------------------------------------------------------
ஊடுதல் காமத்திற் கின்பம்; அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்
 (திருக்குறள்: காமத்துப் பால்:அதிகாரம்:ஊடல் உவகை - குறள்:1330)
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------